Sunday, August 15, 2010

ஆலயச்சிறப்புமிக்க நீர்வேலி

ஊரின் நடுநாயகமாக விளங்கும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோவிலின் திருமஞ்சனக்கிணறு அற்புதமானதும் தான்தோன்றியானதும் ஆகும். இதனை ஒட்டிப் பல செவிவழிச் செய்திகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பிள்ளையார் கோயிலில் பாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சிவபெருமானுக்கும் முதன்மையான இடமுள்ளமையும் குறிக்கத்தக்கது.
இந்த ஆலயத்தில் உள்ள திருத்தேர் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்தது. கலைநயம் மிக்கது. இத்திருக்கோவில் போலவே நீர்வேலி தெற்கில் புகழ்மிக்க கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. அழகிய இராஜகோபுரத்துடன் திகழும் இக்கோவிலிலுள்ள ஆறுமுகசுவாமி மற்றும் நடராஜர் திருவுருவங்கள் புராதன சிற்பக்கலைச் சுவைஞர்களுக்கு அரிய பொக்கிஷமாகும்.

நீர்வேலிக் கிராமத்தின் வடகிழக்கில் வாய்க்காற்தரவைப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. மக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இவ்வாலயம் ஆலய குருமார்களால் பரிபாலிக்கப்படுகின்றது. ஆலயத்திலுள்ள பழைமை வாய்ந்த ஜோடிக்குதிரை வாகனம் கண்ணையும் கருத்தையும் கவரும் எழிலுடையது.

இம்மூன்று புராதன ஆலயங்களையும் தவிர நீர்வேலி வடக்கில் செல்வக்கதிர்காம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலய கருவறை வடிவமைப்பு சிறப்பானது. குமாரபுஷ்கரணி என்ற இந்த ஆலய தீர்த்தக்கேணியின் வடிவமைப்பும் வித்தியாசமாக உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் அருகருகே காமாட்சியம்பாள் ஆலயம், ராஜராஜேஸ்வரியம்பாள் ஆலயம், காளியம்பாள் ஆலயம் என்ற மூன்று பெரிய அம்பாள் ஆலயங்கள் அமைந்துள்ளன.

தவிர வைரவர், காளி போன்ற பல்வேறு தெய்வங்கட்கும் ஊரில் பல்வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்வேலி மேற்கில் மீனாட்சியம்பாள் ஆலயமுள்ளது. ஊரினைச் சுற்றிலும் காவற்தெய்வங்களின் சிறிய பெரிய ஆலயங்கள் உள்ளன.

இந்த ஆலயங்கள் யாவற்றிலும் வருடாந்தம் பெருந்திருவிழாக்களும் தினமும் கிரமமாகப் பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவற்றினைப் போலவே நீர்வேலி வடக்கில் கத்தோலிக்க மக்களால் பரலோக மாதா தேவாலயம் ஸ்தாபிக்கப்பெற்று வழிபாடாற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தேவாலயமும் ஊரின் வளத்தில் பங்காற்றி வருகின்றது.

S.லலீசன்
யாழ்மண்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை