சூழல்

நீர்வேலி !
நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த ஊரின் எல்லைகளாக கிழக்கே கைதடியும் வடக்கே சிறுப்பிட்டியும் மேற்கே அச்செழு, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன. வாழைச்செய்கை, குடிசைக் கைத்தொழில், சவாரித்திடல், அத்தியார் இந்துக் கல்லூரி, கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றுக்குப் பிரபலமான ஊராகும்.

 யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் கோப்பாய் என்ற ஊரினை தெற்கெல்லையாகவும் ஊரெழு, உரும்பிராய், அச்செழு ஆகிய ஊர்களை மேற்கு எல்லையாகவும் சிறுப்பிட்டி என்ற ஊரினை வடக்கெல்லையாகவும் நீண்ட தரவை மற்றும் நீரேரியை கிழக்கெல்லையாகவும் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் என்றதும் பனைமரம் அதன் குறியீடாக அமைவதைப்போல நீர்வேலி என்றதும் எல்லோரது நினைவுக்கும் வருவது வாழைமரம் ஆகும்.


 

 

பெயர்க்காரணம்!
கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவினுள் நீர்வேலிக் கிராம நிர்வாகம் உள்ளடங்குகிறது. இவ்வூரின் பெயர்க்காரணமாக நீரை வேலியாக உடையதால் நீர்வேலி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது. நீர்வேலி ஊரின் கிழக்கெல்லையாக நீர்நிலை உள்ளமை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. இது தவிர 'வேலி' என்ற சொல்லிற்கு ஊர், இடம் என்ற பொருள்களும் தமிழ் அகராதியில் உண்டு. ஆகவே மன நீர்மை மிக்க மக்கள் வாழும் ஊர் என்ற பொருளிலும் இது வழங்கப்பெறக் காணலாம்.

அச்சுவேலி, கட்டைவேலி, விளைவேலி, சங்குவேலி, திருநெல்வேலி போன்ற யாழ்ப்பாணத்துக் கிரமங்களின் பெயர்களும் வேலி என்ற சொற்பதத்தைத் தம்மகத்தே உடையனவாயுள்ளமை ஈண்டு சிந்திக்கத்தக்கது. இந்த வகையில் நீர்வேலி என்ற பெயர் இக்கிராமத்திற்கு உண்டாகியிருக்கின்றமையும் கவனிக்கத்தக்கதே.

யாழ்ப்பாணத்திலிருந்து பதினைந்து கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தை இராஜவீதி மற்றும் யாழ் - பருத்தித்துறை நெடுஞ்சாலை என்பன நகரத்துடன் தொடுக்கின்றன. பெயருக்கேற்ற வகையில் நீர்வேலி தண்ணீருக்குப் பஞ்சம் இல்லாத ஊர். இதனால் நீர்ப்பஞ்சம் இல்லாத இந்த ஊரில் விளைச்சலுக்கும் குறைவில்லை. பஞ்சமில்லாத இந்த ஊரில் வாழ்வோர் கொடைச்சிறப்பு உடையவர்களாக வாழ்கின்றனர். இக்காரணத்தால் தொன்மைக்காலம் தொட்டு ஒழுக்கத்துடனும் கொடைச்சிறப்புடனும் இக்கிராம மக்கள் வாழ்ந்துள்ளனர்.

இக்கிராம மக்கள் வழங்கிய விருந்துபசாரத்தில் மகிழ்ந்த வரகவி சின்னத்தம்பிப்புலவர் 'நீர்வேலி கோப்பாய் நிறை செல்வமாகும்' என்று பாடியுள்ளார்.

இக்கிராம வளத்தைப் பாடமுனைந்த அறிஞர் கு.சிற்சபேசன்


'புன்னை மாதுளை பூங்கொதி மாபுளி
தென்னை கூவிளந் தேனுகர் வண்டினம்
துன்னு பூக வனந்தொறும் வாழையோ
அன்ன தாழையோடு அடர்ந்தது சோலையே' 


என்று வியந்து பாடுகிறார்.

நீர்வையம்பதி - நீர்வேலி என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற இந்த ஊர் வரலாற்றுச்சிறப்புமிக்கது. யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசர்களில் ஒருவனான சிங்கைப் பரராஜசேகரனின் மருமகனும் அவனது முதல் மந்திரியாகத் திகழ்ந்தவனுமாகிய தமிழில் இரகுவம்ச மகா காவியத்தை யாத்த 'அரசகேசரி' என்பவன் அமைத்ததாகக் கருதப்படும் அருள்வளர் ஸ்ரீஅரசகேசரிப் பிள்ளையார் கோயில் நீர்வேலியூரின் நடுநாயகமாக விளங்குகிறது. இது இவ்வூரின் தொன்மைச் சிறப்பைக் காட்டி நிற்கிறது. இவ்வூரினூடே பழங்கால ராஜாக்கள் பாவித்த 'இராஜவீதி' ஊடறுத்துச் செல்கின்றமையும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

இயற்கை வளங்கள் நிறைந்த இந்த ஊர் வாழைக்குப் பெயர் பெற்றது. இதனால் 'கதலிவனம்' என்கிற சிறப்பை உடையது. தவிர அறிஞர்களும் குருமார்களும் கலைஞர்களும் வேளாண்மை செய்பவர்களும் கவிஞர்களும் நிறைந்து வாழ்ந்ததாலும் வாழ்வதாலும் இவ்வூர் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது. அதிகளவில் இந்துக்கள் வாழும் இந்த ஊரில் இந்துக்கோயில்கள் அதிகளவிலும் சிறப்புற்றும் காணப்படுகின்றன.



பொருளாதாரம்!
பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றவற்றில் மக்கள் ஈடுபடுகின்றனர். 



கமமும் கைத்தொழிலும்!
நீர்வேலியின் செல்வமாக சுமார் 3900 மேற்பட்ட பரப்புடைய வயல் நிலம் இருக்கிறது. ஆனால் போரும் அது தந்த பின்னடைவுகளும் அவற்றில் முழுமையும் பயன்படுத்தப்படாமலிருக்கிறது.

ஆவணி அல்லது புரட்டாதி மாதங்களில் இங்கு நெல் விதைப்பு இடம்பெறும். அறுவடையின் பின்னர் இத்தரவை மந்தை மேய்ப்பிற்கு உரிய நிலமாகப் பேணப்படுவதையும் அவதானிக்கலாம். இக்காலப்பகுதியில் இங்குள்ள சவாரித்திடலில் 'மாட்டு வண்டில் போட்டி'களும் இடம்பெறுகின்றன. வயல் நிலத்திற்கு அடுத்த படியாக வீட்டுநிலப்பயிர்ச் செய்கையும் முக்கிய இடம்பெறுகின்றது.

நீர்வேலி வாழைச்செய்கைக்கு பெயர்பெற்ற பூமி. 12000 பரப்பு தோட்டநிலத்தில் இது செய்கை பண்ணப்படுகின்றது. தோட்டங்களில் எட்டு அடி இடைவெளியில் வாழைக்குட்டிகளை நாட்டிச் செய்கை பண்ணுவதை அவதானிக்கலாம்.

போரின் காரணமாக வெளியிடத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் வாழைக்குலைகள் உரிய விலைபோகாமல் இங்குள்ள விவசாயிகள் வேதனைப்பட்டனர். தற்போது இந்த நிலை மாற்றமுற்று வருவது மகிழ்ச்சிக்குரியது. தவிர புகையிலை, வெங்காயம் போன்றனவும் மரக்கறிச் செய்கைகளும் பரவலாக நீர்வேலியில் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.

நீர்வேலியில் விவசாயத்தைப் போலவே கைத்தொழிலும் சிறப்புற்றிருக்கின்றது. இரும்புத் தொழில்கள் மற்றும் மரவேலைகள் நீர்வேலி காமாட்சியம்பாள் கைத்தொழிற்சங்கத்தினை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

இங்கே மிதிவண்டி, மணிக்கூடு போன்றன கூட உருவாக்கப்பட்டதாகக் கூறுவர். போரின் வடுக்களை இங்கும் காணலாம். இந்துச்சிற்ப சாஸ்திர மரபுப்படி வாகனங்கள், தேர் போன்றவற்றை செய்து வரும் ஆச்சாரியார்களும் நகை வேலை செய்யும் மக்களும் நீர்வேலியின் கைத்தொழிற்துறையில் தடயம் பதித்துச் செயற்படுகின்றனர். இவற்றினைப் போலவே சுருட்டுக்கைத்தொழிலும் சிறப்புற்று விளங்குகிறது.



கல்வி!
கல்வி வளர்ச்சியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியினது பங்கு பிரதானமாகும். நீர்வேலியில் அத்தியார் இந்துக்கல்லூரி, சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை, கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம், றோ.க.த.க. பாடசாலை, இந்துத்தமிழ்க்கலவன் பாடசாலை என்ற ஐந்து பாடசாலைகள் அமைவு பெற்றுள்ளன.

1850ம் ஆண்டளவில் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரால் ஆரம்பிக்கப்பட்ட சிவப்பிரகாசவித்தியாலயம் என்ற பாடசாலை 1920களில் கிறிஸ்தவமிஷனரிமாருக்கு விற்கப்படவிருந்த சமயத்தில் அத்தியார் அருணாசலம் அதனை விலை கொடுத்து வாங்கி இன்றுள்ள அத்தியார் இந்துக்கல்லூரியை ஆங்கிலப்பாடசாலை – தமிழ்மொழிப்பாடசாலை என்ற இரு பிரிவுகளாக்கி 11-02.1929 அன்று தொட்டு திறந்து செயற்படச்செய்தார். எண்பது ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றி சிறப்புடன் மிளிர்கின்றது இக்கல்லூரி.

இதே போலவே 125 ஆண்டுகளைக் கடந்தும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை அறிவொளி பரப்பி வருகிறது.

1905ல் சுவாமி ஞானப்பிரகாசரால் ஸ்தாபிக்கப்பட்ட றோ.க.த.க பாடசாலையும் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயமும் சிறுவர்களின் அடிப்படைக்கல்வியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.

இவை போலவே கடந்த ஐம்பது வருடங்களாக நீர்வேலி தெற்கில் இந்துத்தமிழ்க்கலவன் பாடசாலை இயங்கி வருகின்றது. நீர்வேலியின் கல்விப்புலத்தில் தனியார் கல்வி நிலையங்களும் முன்பள்ளிகளும் அறநெறிப்பாடசாலைகளும் கூட தத்தம் நிலையங்களை நாடி வருவோர்க்கு அறிவொளியூட்டி வருகின்றன.


அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
  
ஆன்மிகம்!
ஊரின் நடுநாயகமாக விளங்கும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோவிலின் திருமஞ்சனக்கிணறு அற்புதமானதும் தான்தோன்றியானதும் ஆகும். இதனை ஒட்டிப் பல செவிவழிச் செய்திகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பிள்ளையார் கோயிலில் பாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சிவபெருமானுக்கும் முதன்மையான இடமுள்ளமையும் குறிக்கத்தக்கது. இந்த ஆலயத்தில் உள்ள திருத்தேர் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்தது. கலைநயம் மிக்கது. 
இத்திருக்கோவில் போலவே நீர்வேலி தெற்கில் புகழ்மிக்க கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. அழகிய இராஜகோபுரத்துடன் திகழும் இக்கோவிலிலுள்ள ஆறுமுகசுவாமி மற்றும் நடராஜர் திருவுருவங்கள் புராதன சிற்பக்கலைச் சுவைஞர்களுக்கு அரிய பொக்கிஷமாகும்.
நீர்வேலிக் கிராமத்தின் வடகிழக்கில் வாய்க்காற்தரவைப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. மக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இவ்வாலயம் ஆலய குருமார்களால் பரிபாலிக்கப்படுகின்றது. ஆலயத்திலுள்ள பழைமை வாய்ந்த ஜோடிக்குதிரை வாகனம் கண்ணையும் கருத்தையும் கவரும் எழிலுடையது.
இம்மூன்று புராதன ஆலயங்களையும் தவிர நீர்வேலி வடக்கில் செல்வக்கதிர்காம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலய கருவறை வடிவமைப்பு சிறப்பானது. குமாரபுஷ்கரணி என்ற இந்த ஆலய தீர்த்தக்கேணியின் வடிவமைப்பும் வித்தியாசமாக உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் அருகருகே காமாட்சியம்பாள் ஆலயம், ராஜராஜேஸ்வரியம்பாள் ஆலயம், காளியம்பாள் ஆலயம் என்ற மூன்று பெரிய அம்பாள் ஆலயங்கள் அமைந்துள்ளன.
தவிர வைரவர், காளி போன்ற பல்வேறு தெய்வங்கட்கும் ஊரில் பல்வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்வேலி மேற்கில் மீனாட்சியம்பாள் ஆலயமுள்ளது. ஊரினைச் சுற்றிலும் காவற்தெய்வங்களின் சிறிய பெரிய ஆலயங்கள் உள்ளன.
இந்த ஆலயங்கள் யாவற்றிலும் வருடாந்தம் பெருந்திருவிழாக்களும் தினமும் கிரமமாகப் பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவற்றினைப் போலவே நீர்வேலி வடக்கில் கத்தோலிக்க மக்களால் பரலோக மாதா தேவாலயம் ஸ்தாபிக்கப்பெற்று வழிபாடாற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தேவாலயமும் ஊரின் வளத்தில் பங்காற்றி வருகின்றது.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை